"தெருவிலங்குகளின் உயிரைப் பாதுகாப்பது நம் பொறுப்பு" - பிரதமர் ஹரிணி அமரசூரிய!
இலங்கை செல்லப்பிராணிகள் கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினால் (SLSAVA) ஏற்பாடு செய்யப்பட்ட "PET EXPO 2026" சர்வதேசக் கண்காட்சி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஆரம்பமானது.
இதன் தொடக்க விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். தெருவிலங்குகளின் பாதுகாப்பு, தத்தெடுப்பு மற்றும் அவற்றின் நலன்புரி குறித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இக்கண்காட்சியில் "ஆலோகா" என்ற விசேட கண்காட்சிக் கூடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனைப் பார்வையிட்ட பிரதமர், விண்ணப்பித்திருந்த ஒருவரிடம் தெருநாய்க்குட்டி ஒன்றை உத்தியோகபூர்வமாகத் தத்தெடுப்பதற்காக ஒப்படைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
விலங்குகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரத்திற்கு (Cabinet Paper) அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் விலங்குகள் நலன்புரி கொள்கைகளை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களில் சிறிய நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகளைக் கைவிட்டுச் செல்லும் தவறான பழக்கத்தை பொதுமக்கள் கைவிட வேண்டும்.
செல்லப்பிராணிகளை வளர்ப்பதுடன் நின்றுவிடாமல், தெருவிலங்குகளின் உயிரைப் பாதுகாப்பதிலும் சமூகம் பொறுப்புடன் நடக்க வேண்டும். சமீபத்தில் இலங்கையில் சிறுமி ஒருவருக்கும் முள்ளம்பன்றிக்குமிடையிலான அரிய பாசப் பிணைப்பு வைரலானதை நினைவுகூர்ந்த பிரதமர், விலங்குகளுடன் பழகும் குழந்தைகளுக்குப் பிற உயிர்கள் மீது பரிவும், கருணையும், பாசமும் இயல்பாகவே வளரும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை செல்லப்பிராணிகள் கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் கால்நடை வைத்தியர் நுவன் விக்ரமசிங்க, கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வ்ராய் கெலி பால்தசார், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே