உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையால் உயிருக்கு ஆபத்து – ஜனாதிபதி அநுர தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளால் தனக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதை அறிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சவால்களையும் ஆபத்துகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் சந்திக்கத் தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புலனாய்வுத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தனது பாதுகாப்புக்கும் அவர்களே பொறுப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆபத்துகளை ஏற்காமல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தான் நம்பவில்லை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த ஆபத்துகளுக்கு மத்தியில் தனது பதவி பறிபோனாலும், அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு பதவியிலிருந்து வெளியேறத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் சுமார் 23,000 குற்றச்சாட்டுகளும் 3,000 சாட்சியாளர்களும் இருப்பதாகவும், தற்போது வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நீதித்துறையில் நிலவும் வழக்கு தேக்கங்களை குறைப்பதற்காக புதிய நீதிமன்றங்களை அமைத்தல், நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே