பூநகரியில் காற்றாலைத் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு! நேரில் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலைத் திட்டத்திற்காக கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, குறித்த பகுதிகளின் காணி உரிமையாளர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த காற்றாலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், 5,000-க்கும் அதிகமான பயன்தரும் தென்னை மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதுடன், அவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கள விஜயத்தின் பின்னர், கிராஞ்சி ஒருங்கிணைந்த சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் சிறீதரன் எம்.பி. விரிவான கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பூநகரி பிரதேச சபை தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி சுப்பிரமணியம் சுரேன், பூநகரி பிரதேச சபை உறுப்பினர் கண்ணதாசன், கட்சியின் செயற்பாட்டாளர் குபேந்திரன் உள்ளிட்ட சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே