பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சாம்போங்கா நகரிலுள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியுடன் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த சில மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் மாணவரும் பின்னர் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்ததாக சாம்போங்கா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாடசாலை வளாகத்தை உடனடியாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தற்போது பாடசாலை வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாடசாலையின் வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டதுடன், மாணவர்களை பாதுகாப்பாக அவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே