கடல்வழி போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த இலங்கை, இந்தியாவிற்கு இடையில் இணக்கம்
03 நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், கடல்சார் மற்றும் பிராந்திய ரீதியிலான கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக இலங்கை அண்மையில் தொடங்கியுள்ள தேசிய வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி இந்தியப் பாதுகாப்பு அமைச்சருக்கு விளக்கினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் போதைப்பொருள் கடத்தலின் மையமாக மாறியுள்ள நிலையில், சட்டவிரோத போதைப்பொருள் அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான முயற்சிகளில் இந்தியாவின் முழுமையான ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்களை நாடு கடத்துவதற்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
அத்துடன் சமீப காலங்களில் இலங்கை பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட போதெல்லாம் இந்தியா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிதாக கைச்சாத்திடப்பட்ட மூன்று ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் ஆகியோரின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே