மட்டக்களப்பில் ஆலய உற்சவத்தின்போது பட்டாசு வெடித்து 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
மட்டக்களப்பு, கிரான் கூனாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின்போது வெடிக்காத நிலையில் இருந்த பட்டாசு ஒன்று திடீரென வெடித்ததில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (11) இரவு சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரான் கூனாக்காடு பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தன் தனுஸ்கி என்ற 13 வயது சிறுவனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
ஆலய உற்சவத்தின்போது பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில், பெரிய பட்டாசு ஒன்று கொளுத்தப்பட்டதாகவும், அது வெடிக்காததால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், வெடிக்காத நிலையில் காணப்பட்ட அந்தப் பட்டாசை பார்வையிடுவதற்காக சிறுவன் அருகில் சென்றபோது, அது திடீரென வெடித்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெடிப்பில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் உடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே