ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைப்பது ஏன்?

Nila
2 years ago
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைப்பது ஏன்?

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாகவும் இது போற்றப்படுகிறது. பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதமும் ஆடி மாதம் தான்.

ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?

வருடத்தில் எந்த மாதம் வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. ஆடி மாதத்தில் பிறந்த பல நபர்கள் அரசு பதவிகளிலும், அதிகார பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

ஒருவரது வாழ்க்கையை பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ நிர்ணயம் செய்வதில்லை. ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்கும் என்பது எதுகை, மோனையுடன் அமைந்த பேச்சு வழக்காகும்.

ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது ஏன்?

ஆடிமாதம் வந்தாலே புதியதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் புதுமண தம்பதிகள் இணையும் போது, கரு உண்டாகி அடுத்த பத்தாவது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கலாம். சித்திரை அக்னி நட்சத்திரம் என்னும் கடுமையான வெப்பம் நிறைந்த மாதம். இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் எளிதில் சின்னம்மை போன்ற வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் குழந்தையை பாதிக்கும். உடல் நலிவடையும்.

குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவர் என்பதால்தான் 'சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்" என்ற சொல் வழக்கு உள்ளது. இதை காரணமாக கொண்டுதான் ஆடிமாதத்தில் தம்பதியர் சேர்வது நல்லதல்ல என்கின்றனர். எனவே, பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர்.