01.09.2021 சுவிசின் மகுடநுண்ணித்தொற்று பற்றிய அறிவிப்பு (VIDEO)

#Switzerland #Corona Virus #Covid Vaccine
Reha
4 years ago
01.09.2021 சுவிசின் மகுடநுண்ணித்தொற்று பற்றிய அறிவிப்பு (VIDEO)

கடந்த ஊடக நேர் அறிவிப்பில் சுவிற்சர்லாந்து நடுவனரசு மாநில அரசுகளுடனும் மற்றும் நோய்த்தொற்றுத் தடுப்புச் சிறப்பு  குழுவுடனும் புதிய நடவடிக்கையினை குறிப்பாக தடுப்பூசி இட்டதன் சான்றினை பல் இடங்களில் கட்டாயமாக்குவது தொடர்பில் 30.08.21 கலந்தாய்விற்குப்பின்னர் முடிவெடுத்து அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் 01.09.2021 சுவிற்சர்லாந்தின் நடுவனரசின் பெயரால் சுவிஸ் அதிபர் திரு. குய் பார்மெலின் ஊடகங்கள் முன் புதிய முடக்கம் அல்லது நடவடிக்கைகள் தற்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நடவடிக்கை தற்போதைக்கு தள்ளி வைக்கப்பட்டாலும், தொற்றுத் தொகை மேலோங்கின் தடுப்பூசிச்சான்று அமுலாக்கப்படும் எனவும் சுவிஸ் அதிபர் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில் உணவகங்கள், உடற்பயிற்சிநிலையங்கள், மற்றும் சிறுநிகழ்வுகளில் தடுப்பூசி இடப்பட்ட சான்றுடன் மட்டும் பங்கெடுக்கலாம் எனும் சுவிற்சர்லாந்து நடுவனரசின் எண்ணத்தை தள்ளிவைப்பதாக தெரிவித்தார்.

சுவிசில் மகுடநுண்ணித் தொற்றுத் தொகை  (கோவிட் 19) கூடிக்கொண்டபோதும், கடந்த கிழமைகளில் மருத்துவமனைகளில் தங்கி மருத்துவம் பெறும் நோயாளர் தொகை குறைந்திருப்பது சற்று ஆறுதல் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

சுற்றுலாத்துறை

சுவிற்சர்லாந்து நாட்டிற்குள் தொற்றுப் பரவலால் மெலிவடைந்துள்ள சுற்றுலாத்துறைக்கு உந்தலாக 60 மில்லியன் பிராங்களவில் செயற்திட்டங்களை 2022 - 2023 ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்த நடுவனரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி நிலையானபேருள்ள உள்ளூர் சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படுவதுடன், புதிய வழிமுறைகளை நோய்தொற்று பெருகாமலும் அதேவேளை சுவிசிற்குள் சுற்றுலா பாதிக்காமல் இருக்கவும் முயலப்படும் என்றார் சுவிஸ் அதிபர். 

குறிப்பாக சுவிஸ் நாட்டிற்குள் நகர் சுற்றுலாப் பயணங்களில் நிலையான திட்டங்கள் விரிவு படுத்தப்பட்டு, உள்ளூர் சுற்றலா வாய்ப்புக்கள் வளர்க்கப்படுவதும் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

மகுடநுண்ணித் தொற்று

தொற்றுத் தொகை தற்போதும் கூடிக்கொண்டுள்ளது. ஆனாலும் மருத்துவமனைகளில் தங்கி இருப்போர் தொகை குறைவடைந்திருப்பதும் ஆறுதலாகும், ஆனாலும் சில மருத்துவமனைகள் வழமையான தமது செயற்பாடுகளை தொற்றுத் தொகை காரணமாக தள்ளிவைத்துள்ளார்கள். கட்டாய உடனடி அறுவைமருத்துவம் (சத்திரசிகச்சை) மட்டுமே சில மருத்துவமனைகளில் ஆற்றப்படுகின்றது. 

அமெரிக்க நாடு சுவிற்சர்லாந்தை பெருந்தொற்று நிலவும் நாடுகளின் பட்டியலில் இணைத்துள்ளது.

தடுப்பூசி 

சுவிற்சர்லாந்தில் தற்போது 62 விகித மக்கள் தடுப்பூசியை முழுமையாக இட்டுக்கொண்டுள்ளார்கள். தற்போது மருத்துவமனையில் மகுடநுண்ணியால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெறுவோரில் தடுப்பூசி இட்டுக்கொள்ளாதவர்கள் தொகையே கூடுதலாகும். கடந்த காலங்களில் தடுப்புசியிடும் நடைமுறை மெல்ல நகரினும் தற்போது சற்று வேகப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மேலும் தடுப்பூசி இட்டுக்கொள்ள இணக்கம் கட்டுள்ள மக்கள் தொகையும் சற்றுக்கூடியிருப்பதாக குறிக்கப்பட்டது. 

புதிய ஒப்பந்தம் 

பிச்செர் மற்றும் பியோன்ரெக் ஆகிய நிறுவனங்களுடன் சுவிற்சர்லாந்து அரசு தடுப்பூசி பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் படி 2022 - 2023 இற்குள் இந்நிறுவனங்கள் 7 மில்லியன் தடுப்பூசிகளை சுவிசிற்கு வழங்கும். 

தடுப்பூசிக் கட்டணம்

சுவிசில் வாழும் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் தடுப்பூசிக் கட்டணத்தினை சுவிஸ் நடுவனரசு ஏற்றுள்ளது பழைய  முடிவாகும், புதிதாக சுவிற்சர்லாந்திற்கு வெளியில் வாழும் சுவிஸ் குடிமக்கள் எவரும் சுவிசில் தடுப்பூசி இடுவதற்கு வாய்ப்பாக நிலவும் கோவிட் 19 சிறப்புச் சட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் சுவிசின் எல்லை நாடுகளில் இருந்து சுவிசிற்குள் தொழில் செய்ய வருவோர்களும் தடுப்பூசி இட்டுக்கொள்ளலாம், இவர்களது ஊசிக்கான கட்டணத்தினையும் சுவிஸ் அரசு ஏற்றுக்கொள்ளும். 

தடுப்பூசிச்சான்று

சுவிசில் தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களுக்கு நடுவனரசினால் வழங்கப்படும் தடுப்பூசிச்சான்று கடந்த 09.07.21 முதல் வழங்கப்பட்டுவருகின்றது. அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இச்சான்றினை ஏற்றுக்கொண்டுள்ளன. 

வெளிநாடுகளுக்குப் பயணம்செய்வோர் சுவிஸ் அளிக்கும் தடுப்பூசிச் சான்றுகளை எண்ணியல் முறையில் தொலைபேசி இயங்கு செயலியில் பதிசேய்து அல்லது இதழாகப் பதிப்பெடுத்து விரைவுத்தகவல் குறியீட்டினைக் காட்டி (குயூ.ஆர்.கோட்) பயன்படுத்திக்கொள்ளலாம். 

நலவாழ்வு (சுகாதார) அமைச்சர் 

தற்போது நாம் அடுத்த முடக்கங்களையும், நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துள்ளோம். இருப்பினும் தொற்றுத் தொகையினை ஏற்றம் பொறுத்தே எமது முடிவுகள் அமையும். உரிய பாதுகாப்பான சூழல் தொடரமுடியாது போனால், மீளவும் இறுக்கமான நடைமுறைகளை நாம் கைக்கொள்ளவேண்டி வரலாம். பயணக்கட்டுப்பாடு, வெளிநாடுகளுக்கு பயணம் செய்வோர் மீண்டும் சுவிஸ் நாட்டிற்குள் நுழையும்போது தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் போன்ற நடவடிக்கைகளும் மீள நடைமுறைப்படுத்தப்படும் சூழலும் ஏற்படலாம் என்றார் சுகாதார அமைச்சர். 

தொற்றுச்சோதனை

நோய்த் தொற்று அறிகுறியுடன் அல்லது தன்விருப்பில் யாரும் மகுடநுண்ணித் தொற்றுப் பரிசோதனை ஆய்வினை மருந்தகங்களில் அல்லது இதற்கென உருவாக்கப்பட்ட தொற்றாய்வு நிலையங்களில் கட்டணம் செலுத்தாமல் செய்யலாம். 

நோய்த்தொற்றுச்சோதனைக்கான முழுக்கட்டணத்தினையும் சுவிற்சர்லாந்தின் அரசு முழுமையாக ஏற்றுவந்தது. 

01.10.21 முதல் தன்விருப்பின் நோய்த்தொற்றுப் பரிசோதனையினை செய்ய விரும்புவோர் அதற்கான கட்டணத்தினை தாமே செலுத்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். 

நோய்த்தொற்று அறிகுறியுடன் தொற்றாய்வு செய்வோர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, ஆனால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4