இலங்கையில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கியது யார்? வைத்தியர்கள் சங்கம் கடும் கண்டனம்

#SriLanka
Yuga
4 years ago
 இலங்கையில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கியது யார்?  வைத்தியர்கள் சங்கம் கடும் கண்டனம்

நாட்டில் நேற்று(17) பிற்பகல் முதல் பல்வேறு பாகங்களில் திறக்கப்பட்ட மதுபானசாலைகள் இன்று முற்பகல் வேளைகளிலும் திறக்கப்பட்டிருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில், இவ்வாறு மதுபானசாலைகள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மதுபானசாலைகள் திறக்கப்பட்டதையடுத்து, இரவு நேரம் வரையில் மதுபானசாலைகளுக்கு முன்னாள், தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை கருத்திற்கொள்ளாமல், பெருமளவானோர் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அத்துடன், சிறப்பு அங்காடிகளிலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமையால், அந்தப் பகுதிகளிலும் அதிகமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அதேநேரம், இன்றைய தினமும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு, மதுபானங்களை விநியோகிப்பதற்காக பாரவூர்திகள் பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது.

எவ்வாறிருப்பினும், மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியவர் யார் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.

இது குறித்து மதுவரித் திணைக்களத்தை தொடர்புகொண்டு வினவுவதற்கு எமது செய்திச் சேவை பலமுறை முயற்சித்தபோதும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

எவ்வாறிருப்பினும், மதுபானசாலைகளை திறப்பதற்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என மதுவரித் திணைக்களம் நேற்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கருத்து தெரிவித்துள்ள பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாள் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத், மதுபானசாலைகளை திறப்பதன் மூலம், மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுபானசாலைகளை திறப்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ள மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உள்ளனர். அவர்களின் அனுமதியின்றி மதுபானசாலைகளை திறக்க முடியாது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை குறித்து எந்தவொரு நபரும் உரிய தகவலை வழங்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை உரியவாறு நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4