அரியாலை குடும்பஸ்தர் கொலை ! கொல்லப்பட்டவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தவரும் கைது!

#Jaffna
Yuga
4 years ago
அரியாலை குடும்பஸ்தர் கொலை !  கொல்லப்பட்டவரின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தவரும் கைது!

யாழ்., அரியாலை - பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற குடும்பத்தலைவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மற்றொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸாரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்டவரது மனைவியுடன் தொடர்பைப் பேணினார் எனச் சந்தேகிக்கப்படும் நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவரின் மனைவியிடம் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அரியாலை - பூம்புகாரைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் இன்று (19) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின்  மனைவியுடன் அவருக்கு இருந்த தொடர்பு தொடர்பில் எழுந்த பிரச்சினைதான் குடும்பத்தலைவரை கொலை செய்யும் முடிவுக்குக் கொண்டு சென்றுள்ளது என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இருவரும் இணைந்தே குடும்பத்தலைவரை கொலை செய்துள்ளனர் என்றும் ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, முன்னதாக கொல்லப்பட்டவரின் மனைவி பொலிஸாருக்குத் தெரிவிக்கையில், "கணவன் தினமும் போதையில் வந்து என்னுடன் தர்க்கப்பட்டு என்னைத் தாங்குவார். நேற்றும் வழமை போன்று இரவு போதையில் வந்து தர்க்கப்பட்டு என்னைத் தாக்கியபோது, நான் ஆத்திரத்தில கையில் அகப்பட்ட திருவலைக்கட்டையால் திருப்பித் தாக்கியபோது அவர் உயிரிழந்துவிட்டார்" எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது 32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.

அவர் நேற்றிரவு திருவலைக்கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸாரின் விசாரணைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண்ணையும், அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆணையும் யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு பொலிஸார் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4