யாழில் அச்சத்துடன் வாழும் மக்கள்! இரு வீடுகள் தீக்கிரை!
யாழ்.வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமையுடன், சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வாள்வெட்டு குழுவுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.
மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடி வருகின்றனர்.
கடந்த 2 ஆம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் குறித்த நபரும், அவரது கூட்டாளிகளும் இணைந்து வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொருக்கி வன்முறையில் ஈடுபட்டமையால், 6 குடும்பங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் நேற்று முன்தினம் இரு வீடுகளுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
மேலும் சில வீடுகளின் ஜன்னல்கள் உடைத்தும், சொத்துக்கள் உடமைகள் என்பவற்றை தீக்கிரையாக்கியுள்ளனர்.
இந்நிலையில், தினமும் அச்சத்துடன் வாழ்வதாக அல்வாய் வடக்கு மகாத்மா கிராம மக்கள் கூறியிருக்கின்றனர்.