வங்கியின் பாதுகாப்பு பெட்டியை உடைத்து பணத்தினை திருடிய கும்பல் மாட்டியது
காலி மாவட்டத்தில் கஹதுவ தலாவ பகுதியில் உள்ள வங்கிப் பாதுகாப்பு பெட்டியை உடைத்து அதிலிருந்த எட்டரை லட்சம் ரூபாயைத் திருடிய 5 பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களால் ஹிக்கடுவ ஆரம்பப் பாடசாலையின் ஸ்மார்ட் வகுப்பறையில் வைத்திருந்த கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கணினி அமைப்பு மற்றும் தொலைக்காட்சிப் பெட்டியும் திருடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்கள் பத்தேகம, கொட்டகொட கல்லூரியின் தகவல் தொடர்பு வகுப்பின் உபகரணங்களையம் கொள்ளையடித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
அண்மையில் ஊரடங்கு உத்தரவின் போது சந்தேக நபர்கள் இந்த திருட்டுகளைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் கடும் போதைக்கு அடிமையானவர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாகொட, கஹதுவ மற்றும் பிட்டிகல பகுதிகளில் வசிப்பவர்கள்.
சந்தேகநபர்கள் திருடிய சில உபகரணங்களை ஹிக்கடுவ, ஹொரங்கல்ல மற்றும் பிட்டிகல ஆகிய இடங்களில் குறைந்த விலைக்கு விற்றதும் விpசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.