நல்லூர் நிர்வாகி மாப்பாண முதலியார் இறைவனடி சேர்ந்தார்
பிரமித்த ஆளுமையும் சிறந்த தலைமைத்துவமும் கொண்ட மாமனிதர். முருக பக்தி என்பதற்கு முன் உதாரணமானவர். நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார்.
1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் நேற்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவர் கடந்த 1964 டிசம்பர் 15 முதல் இன்று வரை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக 50 வருடங்களுக்கு மேலாக அன்னார், முருகப்பெருமானுக்கு தொண்டாற்றி வந்துள்ளார்.
ஏற்கனவே ஆலய வழிநடத்தல் திறனில் தந்தை இரகுநாத மாப்பாண முதலியார் பின்னர் மூத்த சகோதரன் சண்முகதாஸ மாப்பாண முதலியாருடன் பணியாற்றிய அனுபவம் இருந்தமையாலும் இயல்பாகவே முருகப்பெருமான் மீது தீராத பக்தி பெருக்கை கொண்டிருந்தமையாலும் இவரது பணிக்காலம் ஆலய வளர்ச்சியில் மிகப்பெரும் தனித்துவ மிக்கதாய் நகர்ந்து வந்தது.