சீனாவின் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிக்க தடை!
சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக துறைமுக அதிகாரி கப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
20,000 மெட்ரிக் தொன் சேதன பசளையுடன் சீனாவின் குறித்த கப்பல் நேற்று மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்திருந்தது.
நாட்டிற்கு வருகை தரும் குறித்த கப்பலில் காணப்படும் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாக தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் தெரிவித்திருந்தது.
எனினும், குறித்த கப்பல் கொழும்பு துறைமுக எல்லைக்குள் இதுவரை பிரவேசிக்கவில்லை எனவும், வருகை தருவது தொடர்பில் எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் துறைமுக அதிகாரி குறிப்பிட்டார்.
இதேவேளை சீன நிறுவனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட பசளைகளின் மாதிரிகளில் பக்டீரியா காணப்படுகின்றமை இரண்டு சந்தர்ப்பங்களில் உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.