சி.ஐ.டி பணிப்பாளர் என கூறி பொலிஸ் பொறுப்பதிகாரியை ஏமாற்றிய நபர் கைது
தன்னை சி.ஐ.டியின் பணிப்பாளர் என பொய்கூறி தொலைபேசி ஊடாக பயாகல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பயாகல மட்டியலமுல்ல பகுதியில் வசிப்பவர் எனவும் சட்டவிரோத மதுபான கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
பயாகல பிரதேசத்தில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்வதற்காக, 47 வயதுடைய நபர் ஒருவர் தன்னை சி.ஐ.டியின் பணிப்பாளர் என பொய்கூறி, கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்ய வேண்டும் என அப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கூறியுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரை விடுதலை செய்யவில்லை என்றால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யப்போவதாகவும் தொலைபேசியூடாக குறித்த நபர் மிரட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தான் ஹம்பாந்தோட்டைக்குச் செல்வதாகவும் மறுநாள் திரும்பி வரும் வழியில் பயாகல பொலிஸ் நிலையத்திற்கு வருவதாகவும் அதற்குள் சம்பவத்தை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் சந்தேக நபர் மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது..
இதேவேளை கைது செய்யப்பட்ட நபரை அடுத்த மாதம் 02ஆம் திகதி வரையில் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.