பிரதமரை சந்தித்து கலந்துரையாடிய கௌதம் அதானி
இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அலரிமாளிகையில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக, முதலீட்டாளரான கௌதம் அதானி 10 பேர் கொண்ட குழுவுடன் நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார்.
தனிப்பட்ட விஜயமாக அமைந்திருந்தபோதிலும் கௌதம் அதானி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எரிசக்தித்துறை முதலீடு என்பன தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.
கௌதம் அதானி உள்ளிட்ட தரப்பினர் நேற்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர் மீள் பிறப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டத்தில் முதலீடு செய்வது தொடர்பாக ஆராய்வதற்காக மன்னாருக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.