மனைவியை மீட்டுத்தருமாறு 19 வயது இளைஞன் வவுனியாவில் போராட்டம்
தனது மனைவியை மீட்டுத் தருமாறு கோரி வவுனியாவில் 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி 19 வயது இளைஞன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன்இ கடந்த ஜூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களை தாங்கி விட்டு மனைவியை கொண்டு சென்றுள்ளதாக குறித்த இளைஞன் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
எனினும் பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக தெரிவித்து குறித்த இளைஞன் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக கற்குழி பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயரமான தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான நிலையும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருந்தது.