வெள்ளத்தில் மூழ்கிய யாழ்ப்பாணம்! தடைபோடப்பட்ட வீதிப்போக்குவரத்து
நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்துவரும் கன மழையுடனான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றைய தினம் 243 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதி, பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி வீதியாக காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டு வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு இன்று அதிகாலை முதல் அடை மழை பொழிகின்றது. இதனால் நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் யாழ் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரான்லி வீதி, கண்ணாபுரம், சோலைபுரம், கற்குளம், பொம்மைவெளி, நித்திய ஒளி, மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகர சபை பிரதேசங்கள் நீரில் மிதக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகரின் மத்தியில் நீர் வழிந்தோடும் பிரதான இடங்கள் பல தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினால் மிக வேகமாக நீர் அதிகரிப்பதனால் மக்கள் பெரும் அவலத்தை எதிர் நோக்குகின்றனர்.
இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகரில் கழிவு நீர் ஓடும் கால்வாய் வாய்க்கால் சீரமைக்கப்படாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.