தாயின் சேலையால் உயிரிழந்த சிறுமி
நல்லதண்ணி -மறே தோட்ட வலைதள பிரிவில் சேலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் கழுத்து இறுகி 13 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டில் தாயின் சேலையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் குறித்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, கழுத்து இறுகி இச்சம்பவம் இடம்பெற்றதென சிறுமியின் தந்தை நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நல்லதண்ணி பொலிஸார், இறந்த நிலையில் இருந்த சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன், சட்ட வைத்திய அதிகாரியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுமியின் சடலம் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று அவரது சடலம் அதே தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இச்சிறுமியின் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.