நவம்பர் முதல் 2 வாரங்களில் 19000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, சுவிட்சர்லாந்து, கனடா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்து 19,222 சுற்றுலாப் பயணிகள் நவம்பர் முதல் இரண்டு வாரங்களுக்குள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று தெரிவித்தார்.
நேற்று காலி முகத்திடலில் இலங்கை சுற்றுலாக் கண்காட்சி 2021 இன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
நாட்டிற்கு வருகை தருவதற்கான உலகளாவிய பயணிகளின் ஆர்வம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாத் துறையானது மும்முரமான குளிர்காலத்தை எதிர்நோக்குவதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.