அமைச்சை இராஜிநாமா செய்ய போவதில்லை- உதய கம்மன்பில
நாங்கள் தவறிழைக்கவில்லை. தவறிழைத்திருந்து பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி முடிவு செய்வாராக இருந்தால் அதில் எந்த சிக்கலும் இல்லை.
அமைச்சு பறிபோகும் என்றே மக்களுக்கும், நீதிமன்றத்துக்கும் உண்மையை வெளிப்படுத்த முன்வந்தோம். அமைச்சு பதவியை விட மனசாட்சி, மக்களுக்கு உண்மையாக இருத்தால், நாட்டை பாதுகாத்தல் என்பவை முக்கியமென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளாா்.
அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகியோரை பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நிவ் போட்டஸ் எனர்ஜி நிறுவனம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதுதொடர்பில் முறையான பேச்சுவார்ததை எதுவும் முன்னெடுக்கப்பட வில்லை என்றும், அவ்வாறான அமைச்சரவை பத்திரம் முறையான அனுமதியை பெறவில்லை என்றும் நாட்டுக்கும் நீதிமன்றத்துக்கும் உண்மையையே அறிவித்திருந்தோம்.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாட்டை நேசிப்பதை நாங்கள் தவறென எண்ணவும் இல்லை. நாங்கள தவறிழைக்காததால் எங்களின் பதவியை இராஜிநாமா செய்யும் யோசனையும் இல்லை. தவறிழைத்திருந்தால் மாத்திரமே பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும்.
யாராவது நாங்கள் தவறிழைத்துள்ளோம் என்று எண்ணுவார்களாக இருந்தால், எங்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.
அமைச்சு பதவி பறிபோகும் ஆபத்து இருக்கிறது என்று அறிந்தும், அதனை சவாலக எடுத்துக்கொண்டே நாட்டு மக்களுக்கும் நீதிமன்றத்துக்கும் உண்மையை அறிவிக்க தீர்மானம் எடுத்தோம்.
மனசாட்சி, மக்களுக்கு உண்மையாக இருத்தல், நாட்டை பாதுகாத்தல் என்பன அமைச்சு பதவியை விட எங்களுக்கு முக்கியம் – என்றாா்.