இந்தியாவின் உதவியை நாடவும்: ரணில் அறிவுரை
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார ரீதியிலான பிரச்சினைக்கு உடனடி தீர்வை எட்டுவது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.
நாடு டொலர் இல்லாமல், பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
2021ம் ஆண்டில் உலகில் பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை காண்பித்துள்ளதாகவும், இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டுகின்றார்.
இதனால், அரசாங்கம் உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையென்றால், மாற்று திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் அரசாங்கம் இந்த இரண்டு விடயங்களையும் செய்யாதமையினால் நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றர். இதேவேளை, நாட்டில் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
தமக்கு கிடைக்கின்ற தகவல்களின் பிரகாரம், எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் உணவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார் இதனால் இந்தியாவிடமிருந்து கடனுக்கு உணவுப் பொருட்களையும், எரிபொருளையும் பெற்றுக்கொள்ளுமாறும் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.