இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்! இந்தியா
கடினமான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை தாம் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணுவதற்கு இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வதற்காக, இரண்டு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் இருதரப்பு வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவியை நீடிப்பது குறித்து, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், இலங்கையை முக்கியமான தரப்பாகக்கொண்டு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.