கைக்குண்டு மீட்பு விவகாரம்: பின்னணியில் பெரிய சூத்திரிதாரி
அண்மையில் தனியார் வைத்தியசாலை கழிவறையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் மற்றும் பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் பெரிய சூத்திரதாரி இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் அரசாங்கம் உட்பட நாட்டின் பாதுகாப்புப் படையினரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் ஒரு நாசகார செயலாக இருக்கலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இரண்டு நாட்களேயான நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பிரதான சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொலிஸாருக்கு வழங்க வேண்டிய தகவல்களை பொலிஸாருக்கு வழங்காமல் ஊடகங்களுக்கு வழங்குவதன் மூலம் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளமையால் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தடையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸாரின் மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்படுவதால் பொலிஸ் விசாரணைகளை முன்னெடுப்பதில் பெரும் பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுங்கமுவ பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.