மின் தடை குறித்த புதிய அறிவிப்பு!

Prabha Praneetha
2 years ago
மின் தடை குறித்த புதிய அறிவிப்பு!

அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துள்ளதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மின் தடைக்கு செல்லவேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று (22) அறிவித்துள்ளது.

இது குறித்த காலம், நேரம் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என பதில் பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை சப்புகஸ்கந்த அனல்மின் நிலையம் இன்று (22) பிற்பகல் எரிபொருள் தீர்ந்து போனதால் முற்றாக செயலிழந்தது.

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் இருப்பு இன்று நண்பகலுடன் நிறைவடைய இருந்த போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மேலும் 600 மெற்றிக் தொன் எரிபொருளை நேற்றிரவு இலங்கை மின்சார சபையிடம் கையளித்ததாக இன்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியளவில் நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

இதனால் தேசிய மின்கட்டமைப்பிற்கு 108 மெகாவோட் மின் இழப்பு ஏற்படுகிறது.

வாரயிறுதியில் ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான மின்சாரத் தேவையினால் இன்றும் நாளையும் மின்வெட்டுத் தேவைப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அனல் மின் நிலையங்களில் எண்ணெய் தீர்ந்துள்ளதால், வரும் செவ்வாய்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 183 மெகாவோட் மின் இழப்பு ஏற்படும் என்று அந்த சபைதெரிவித்துள்ளது.