பட்டினியால் பிள்ளைகளை விற்கும் பெற்றோர்கள்.. ஆப்கானிஸ்தானில் அவல நிலை.!!!

Keerthi
2 years ago
பட்டினியால் பிள்ளைகளை விற்கும் பெற்றோர்கள்.. ஆப்கானிஸ்தானில் அவல நிலை.!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பட்டினியால் வாடும் 23 மில்லியன் மக்களை காக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் குளிர் ஒருபுறம் மக்களை வதைத்து வரும் நிலையில் பட்டினியால் 23 மில்லியன் மக்கள் தவித்து வருவதாக முன்னாள் பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியிருக்கிறார். மேலும், பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகளை விற்று மீதமிருக்கும் பிள்ளைகளின் பட்டினியை போக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், சிலர் தங்களது இளம்வயது பெண்பிள்ளைகளை தலிபான்களின் கொடுத்து பணம் வாங்கும் கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து உலக வங்கிகள், அந்நாட்டின் நிதி ஆதாரங்களை முடக்கி விட்டது.

எனவே, ஆப்கானிஸ்தானில் உள்ள சுகாதார பணியாளர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களை கருத்தில் வைத்து, முடக்கப்பட்டிருக்கும் நிதியை விடுவிக்க கோர்டன் பிரவுன் வலியுறுத்தியிருக்கிறார். இதன் மூலம், அந்நாட்டின் அரசால், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் என்று உலக நாடுகளிடம் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.