இலங்கையில் அதிகரிக்கும் கொவிட் மரணங்களுக்கு ஒமைக்ரொன் காரணமா?
நான்கு மாதங்களுக்குப் பின்னர் நாளாந்தம் பதிவாகின்ற கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை நேற்று 1000 ஐ கடந்திருந்தது.
எனினும் தற்போது கொவிட் நோயாளர்கள் அதிகரிக்கின்றமையானது, அவர்களுக்கு சிசிக்சை வழங்கும் விடயத்தில் சுகாதார தரப்புக்கு பெரும் சவாலை ஏற்படுத்தாது என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாளாந்தம் 4,000 என்ற அளவில் கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போது, அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்பட்டது.
அது போன்று தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்ற நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். அதற்கான இயலுமை சுகாதார கட்டமைப்பில் இருக்கிறது.
அதேநேரம் நாட்டில் தற்போது அடையாளம் காணப்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஒமைக்ரொன் திரிபால் பீடிக்கப்பட்டவர்கள்.
எவ்வாறாயினும் மரணிப்பவர்கள் ஒமிக்ரொன் தொற்றால் பீடிக்கப்பட்டவர்களா? என்பதைக் கூறுவது சிரமமானது என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் கொவிட் பரவலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதும் அவசியமாகும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.