கண்டாவளை வைத்திய அதிகாரி தொடர்பாக சிரீதரனின் அக்கறை. அகப்படப்போவது யார்?

Keerthi
2 years ago
கண்டாவளை வைத்திய அதிகாரி தொடர்பாக சிரீதரனின் அக்கறை. அகப்படப்போவது யார்?

கிளிநொச்சி கண்டாவளை வைத்திய அதிகாரி பிரியந்தினி எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் சுகாதார துறை பணிப்பாளர் அசேல குணவர்தனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நேற்றையதினம் திகதியிடப்பட்டு சிறிதரனால் எழுதப்பட்ட அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கண்டாவளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் வைத்திய அதிகாரி தனது தனிப்பட்ட நலன்களையும், சுய விளம்பரப்படுத்தலையும் நோக்காகக் கொண்டு நான் அவருடன் தொலைபேசியில் உரையாடிய குரல் பதிவினை ஊடகங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தியுள்ளமை எனது சிறப்புரிமையை மீறுவதாகவும் தனிப்பட்ட நற்பெயருக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளது.

குறித்த வைத்தியரின் சகோதரனும் எனது நண்பருமான வைத்தியர் சயந்தகுமார் என்னுடன் தொலைபேசி மூலம் உரையாடி உளவியல் ரீதியாக தாக்கம் அடைந்துள்ள தனது சகோதரியோடு கலந்துரையாடுமாறு என்னை மிக வினயமாக கேட்டுக் கொண்டதற்காக 27.01.2022 திகதி மாலை அவருடன் தொடர்பு கொண்டு உரையாடி இருந்தேன்.

இதன்போது நல்லெண்ண நோக்கில் நான் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை எனது அனுமதி இன்றி பதிவு செய்து அன்றைய தினமே அதனை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தி இருப்பது எனது கௌரவத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் மேற்படி தொலைபேசி உரையாடலை எனது அனுமதி இன்றி பதிவு செய்தமைக்கும் அதனை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியமைக்கும் எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் சிறிதரன் கூறியுள்ளார்.

அதோடு, முழுக்க முழுக்க தனது சுய விளம்பரபடுத்தலை மையமாகக்கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதாரத் துறைக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அது தொடர்பில் எனக்கு அறியத் தருமாறும் சிறிதரன் அதில் குறிப்பிட்டுள்ளார்.