இலங்கையில் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி – கழிப்பறைக்குள் சிக்கிய கமரா!

#SriLanka
Nila
2 years ago
இலங்கையில் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி – கழிப்பறைக்குள் சிக்கிய கமரா!

கம்பஹாவில் மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல நிலையம் ஒன்றின் பெண்கள் கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த கழிப்பறையில் கமரா பொருத்தப்பட்டிருப்பதை, தனது மகள் உட்பட மாணவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவி ஒருவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மோசமான செயற்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளதாக மாணவிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்மூலம் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி இருக்கலாம் என மாணவிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கம்பஹா பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் இதுவரை நியாயமான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனது மகள் கழிப்பறைக்கு சென்றிருந்த போது பத்திரிக்கை ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மர்ம பொருள் ஒன்றை அவதானித்துள்ளார். சந்தேகம் ஏற்பட்டு அதனை திறந்து பார்த்த போது அதில் இரகசிய கமரா மறைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அதனை அவர் ஏனைய மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அன்றைய தினம் வகுப்பு எடுத்த ஆசிரியரிடம் இந்த விடயத்தை கூறிய போது அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.