அதிர்ஷ்டத்தை நம்பிய பெண் 2 இலட்சம் ரூபாயை இழந்தார்! யாழ்ப்பாணத்தில் சம்பவம்

Mayoorikka
2 years ago
அதிர்ஷ்டத்தை நம்பிய பெண் 2 இலட்சம் ரூபாயை இழந்தார்! யாழ்ப்பாணத்தில் சம்பவம்

அதிர்ஷ்ட இலாபத்தில் பெருந்தொகைப் பணம் கிடைத்ததாக நம்பிய பெண் அதைப் பெறுவதற்கு ஆசைப்பட்டு ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.

இதேபோன்று, வெளிநாட்டிலிருந்து வந்த பொதியைப் பெறுவதற்காக 60 ஆயிரம் ரூபாய் கட்டி ஏமாந்துள்ளார் சங்கரத் தையை சேர்ந்த ஆண் ஒருவர். இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த மர்ம நபர்கள், அதிர்ஷ்ட இலாப சீட்டில் பெருமளவு பணம் கிடைத்துள்ளது. அதனை பெறுவதற்கு ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இலங்கை வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர்.

இதனை நம்பிய குறித்த பெண்ணும் தன்னுடைய தங்க நகைகளை அடகு வைத்து பணத்தை இலங்கை வங்கியில் வைப்பு செய்துள்ளார். அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு எடுத்தபோது அந்த இலக்கம் துண்டிக்கப்பட்டிருந்தது. இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டமையை அறிந்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதேபோல் சங்கரத்தை துணவி பகுதியில் உள்ள ஆண் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள் வெளிநாட்டிலிருந்து பெறுமதியான பொதி ஒன்று வந்துள்ளதாகவும், அதனை பெறுவதற்கு 60 ஆயிரம் ரூபாயை சம்பத் வங்கியில் வைப்பிலிடுமாறு கூறியுள்ளனர்.

அவரும் பணத்தை வைப்பிலிட்ட பின்னர் அந்த இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்திய நிலையில் அதுவும் துண்டிக்கப்பட்டிருந்தது. அவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.