ஊடகவியலாளர் சமுதிதவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Prathees
2 years ago
ஊடகவியலாளர் சமுதிதவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் விசேட பொலிஸ் பிரிவுக்கு கெஸ்பேவ நீதவான் ருவன்திகா வீரசிங்க நேற்று (18) உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சமுதித சமரவிக்ரமவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 15ஆம் திகதி காலை பிலியந்தலை, வேவலயில் உள்ள சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு அருகில் வந்த குண்டர்கள் கும்பல் கல் மற்றும் மலத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா மற்றும் சட்டத்தரணிகள் குழுவொன்று, சமுதித சமரவிக்ரம மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.