ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் யார்? சர்ச்சை தகவல் வெளியிட்ட முக்கியஸ்தர்

Nila
2 years ago
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் யார்? சர்ச்சை தகவல் வெளியிட்ட முக்கியஸ்தர்

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவின் றோ புலனாய்வு சேவை இருப்பதாக விமானப்படையின் முன்னாள் வீரர் கீர்த்தி ரத்நாயக்க விசேட தகவலை வெளியிட்டுள்ளார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சம்பந்தமாக பாரதூரமான விமர்சனத்தை முன்வைத்து சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஜவன் எழுதிய சொர ரஜின நூலின் பின்னணியில் பசில் ராஜபக்ச இருந்ததாகவும் அவர் சர்ச்சைக்குரிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.

இணையத்தளம் வலை ஒளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து காணப்பட்டமை சம்பந்தமான தகவலையும் வெளியிட்டுள்ள அவர், இதன் பின்னர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக செயற்பாடுகளை முன்னெடுத்த பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான முஸ்லிம் நபர் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸூக்கு துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ரத்நாயக்க, சர்ச்சைக்குரிய மிக் விமான கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக தகவல்களை வெளியிட்டமை காரணமாக தான் அவரை இவ்வாறு துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கும் இக்பால் அத்தாஸூக்கும் தனிப்பட்ட விரோதங்கள் இருக்கவில்லை என தெரிவித்துள்ள ரத்நாயக்க, ஒரு நபரின் கோரிக்கைக்கு அமைய தான் சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக கூறியுள்ளார்.

போர் நடைபெற்ற காலத்தில் கொழும்பை மையமாக கொண்டு இரகசியமாக இயங்கிய பிரிவில் இணைந்து தாம் செயற்பட்டு வந்ததாக கூறியுள்ள ரத்நாயக்க, பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விமானப்படையின் குறுப் கெப்டன் சுகனபால தலைமையிலான புலனாய்வுப் பிரிவில் கீர்த்தி ரத்நாயக்க கடமையாற்றியுள்ளார். அத்துடன் கொழும்பில் இயங்கிய பாதுகாப்பு படையின் இரகசிய பிரிவில் இணைந்து செயற்பட்டு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போர் நடைபெற்ற காலத்தில் உத்தியோகபூர்வமற்ற பல புலனாய்வு குழுக்கள் இயங்கியதாகவும் அதில் ஒன்றிலேயே தாம் கடமையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கீர்த்தி ரத்நாயக்க என்ற இந்த முன்னாள் படை வீரர் தற்போது சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு இப்படியான இரகசிய தகவல்களை எழுதி வரும் ஊடகவியலாளராக செயற்பட்டு வருகிறார்.