ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கை இலங்கைக்கு கிடைத்தது: குற்றச்சாட்டுக்கள் என்ன..?

Mayoorikka
2 years ago
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கை இலங்கைக்கு கிடைத்தது: குற்றச்சாட்டுக்கள் என்ன..?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் இலங்கை மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதில்,முதன் முறையாக சட்ட அதிபர் சுதந்திரமாக செயற்படவேண்டும் என்ற குற்றச்சாட்டும் அடங்குகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீது 855 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதிலும் அவை நிரூபிக்கப்படாமல், அவர்களை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்தநிலையில் இந்த சர்வதேச குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு;ள்ளது.

இலங்கை மீதான இந்த மேலதிக குற்றச்சாட்டுக்கள், எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவுள்ளன. கடந்த திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை, இலங்கையின் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது

 இதனையடுத்து அவர்கள், அரசாங்கத்தின் அவதானிப்புகள் மற்றும் விளக்கங்களை ஜெனிவாவிற்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு அறிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டும் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தவறியதை விரிவாக அந்த அறிக்கை ஆராய்ந்துள்ளது.

தற்போது நாடாளுமன்;றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் பேரவை மகிழ்ச்சியடையவில்லை.தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

எனவே இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் முன்னுரிமை வரி வசதியை மோசமாக பாதிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில்,2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

இது கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்களின் முயற்சியின் விளைவாக இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாக அமைந்துள்ளது.

2022,பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வுகளில் வாக்கெடுப்பு இடம்பெறாது.

எனினும், இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானத்திற்கு முன்னோடியாக இந்த அமர்வு அமைந்துள்ளது.