12 ஆண்டுகளுக்கு பின் உரிமையாளருடன் இணைந்தத செல்லப்பிராணி ஷோயி

Keerthi
2 years ago
12 ஆண்டுகளுக்கு பின் உரிமையாளருடன் இணைந்தத செல்லப்பிராணி ஷோயி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லஃபிய்டி நகரை சேர்ந்தவர் மிச்சில். இவர் 2009-ம் ஆண்டு முதல் தனது வீட்டில் ஷோயி என்ற செல்லப்பிராணி நாயை வளர்த்துவந்தார். 

இதற்கிடையில், மிச்சில் 2010 பிப்ரவரி மாதம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று திரும்பினார். அப்போது, வீட்டில் இருந்த அவரது செல்லப்பிராணி நாய் ஷோயி மாயமானது. தான் ஆசையாக வளர்த்த நாயை காணாததால் வீடு மற்றும் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். 

ஆனால், ஷோயி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து விலங்குகள் நல அலுவலகத்திலும் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து காணாமல் போன ஷோயி நாயின் கழுத்தில் பொறுத்தப்பட்டிருந்த 'மைக்ரோ சிப்’ உதவியுடன் தேடும் பணிகளும் நடைபெற்றது. ஆனால், எங்கு தேடியும் செல்லப்பிராணி நாய் கிடைக்கவில்லை. 

இதனால், அந்த ‘மைக்ரோப் சிப்’ பொறுத்தும் நிறுவனம் ஷோயி நாய் உயிரிழந்திருக்கலாம் என கருதி தேடும் பணிகளை நிறுத்தியது. மேலும், ஷோயி 2015-ம் ஆண்டு உயிரிழந்ததாகவும் பட்டியலிடப்பட்டது. தனது செல்லப்பிராணி நாய் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதால் மிச்சில் மிகுந்த வருத்தமடைந்தார். 

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பின்னர் செல்லப்பிராணி நாய் ஷோயி தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

காணாமல் போன லஃபிய்டி நகரில் இருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் ஸ்டாக்டன் என்ற நகரில் செல்லப்பிராணி ஷோயி உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

ஸ்டாக்டன் நகரில் உள்ள ஒரு குப்பைத்தொட்டி அருகே உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாய் ஒன்று கிடப்பதாக போலீசார், விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு நேற்று சிலர் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த நாயை மீட்டு அதன் உடலில் கட்டியிருந்த மைக்ரோ சிப்பை ஆய்வு செய்தனர். அதில், ஒரு செல்போன் எண் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது இது மிச்சல் உடைய செல்போன் எண் என்பதும் அந்த நாய் 2010-ம் ஆண்டு காணாமல்போன ஷோயி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, செல்லப்பிராணி ஷோயி கண்டுபிடிக்கப்பட்டது குறித்து உரிமையாளர் மிச்சலிடம் தகவல் கொடுக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு முன் காணமல்போன தனது செல்லப்பிராணி ஷோயி கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கேட்டு மிச்சல் மிகுந்த ஆனந்தமடைந்தார். அதன்பின்னர் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு செல்லப்பிராணி நாய் ஷோயி தனது உரிமையாளர் மிச்சலிடம் ஒப்படைக்கப்பட்டது.