இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த போதைப்பொருள் பறிமுதல்!

Mayoorikka
2 years ago
இலங்கைக்கு கடத்த தயாராக இருந்த போதைப்பொருள் பறிமுதல்!

இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக கியூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து சோதனை செய்ததில், அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம் பேட்டமைன் எனும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது. 

மேலும் அதனை அவர்கள் இலங்கைக்கு கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்த இருதய வாஸ் , கிங் பேன், சிலுவை,அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ், கபிலன், சைமோன், ஆகிய 8 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.