ஞான கர்ம சன்யாச யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 52.

#history #Article #Tamil People
ஞான கர்ம சன்யாச யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 52.

நான்காவது அத்தியாயம் (ஞான கர்ம சன்யாச யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத சதுர்தோ அத்யாய:।


ஞான கர்ம சன்யாச யோகம்

(கடமைகளை வேள்வியாக செய்)

ஸ்ரீபகவாநுவாச।
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்।
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே அப்ரவீத்॥ 4.1 ॥

பகவான் சொன்னது: அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஷ்வானுக்கு (சூரியன்) சொன்னேன். விவஷ்வான் மனுவுக்கு சொன்னான் . மனு இக்ஷ்வாவிற்கு சொன்னார்.

ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:।
ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரம்தப॥ 4.2 ॥

எதிரிகளை வாடுபவனே ! இவ்வாறு பரம்பரையாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள். நீண்ட காலம் ஆகிவிட்டதால் இப்போது அந்த யோகம் சீரழிந்துவிட்டது.

ஸ ஏவாயம் மயா தே அத்ய யோக: ப்ரோக்த: புராதந:।
பக்தோ அஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்॥ 4.3 ॥

நீ என்னுடைய பக்தனாகவும், தோழனாகவும் இருக்கிறாய், எனவே பழமை வாய்ந்த அதே யோகத்தை இன்று உனக்கு சொன்னேன். இது மேலானதும் ரகசியமானதும் ஆகும்.

அர்ஜுன உவாச।
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:।
கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி॥ 4.4 ॥

அர்ஜுனன் கேட்டது உனது பிறப்பு பிந்தியது, சூரியனுடைய பிறப்பு முந்தியது, அவருக்கு நீ சொன்னதாக கூறியதை எப்படி புரிந்துக்கொள்வது

ஸ்ரீபகவாநுவாச।
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந।
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரம்தப॥ 4.5 ॥

பகவான் சொன்னது அர்ஜுனா ! உனக்கும் எனக்கும் பல பிறவிகள் கடந்து விட்டன. எதிரிகளை வாட்டுபவனே ! நான் அவை அனைத்தையும் அறிவேன், நீ அறிய மாட்டாய் .

அஜோ அபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஷ்வரோ அபி ஸந்।
ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா॥ 4.6 ॥

நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களின் தலைவன், இருந்தாலும் சொந்த இயல்பை வசபடுத்தி கொண்டு என் மாயையினால் தோன்றுகிறேன்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத।
அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம்॥ 4.7 ॥

பரத குலத்தில் பிறந்தவனே ! எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஓங்குகிறதோ அப்போதெல்லாம் என்னை நான் பிறப்பித்து கொள்கிறேன்.

பரித்ராணாய ஸாதூநாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்।
தர்மஸம்ஸ்தாபநார்தாய ஸம்பவாமி யுகே யுகே॥ 4.8 ॥

நல்லவர்களை காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டவும் யுகந்தோரும் நான் தோன்றுகிறேன் .

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:।
த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுன॥ 4.9 ॥

அர்ஜுனா எனது மேலான பிறப்பையும் செயல்பாட்டையும் இவ்வாறு யார் உள்ளது உள்ளபடி அறிந்து கொள்கிறானோ அவன் உடம்பை விட்ட பிறகு மீண்டும் பிறப்பதில்லை என்னை அடைகிறான்.

வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஷ்ரிதா:।
பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:॥ 4.10 ॥

ஆசை, பயம், கோபம், நீங்கிய என்னால் நிறைக்கபட்ட என்னை சரணடைந்த, ஞானத்தாலும் தவத்தாலும் புனிதமான பலர் என் இயல்பை அடைந்தார்கள்.

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்।
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 4.11 ॥

யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ, அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன். அர்ஜுனா மனிதர்கள் என்னுடைய வழியையே எப்போதும் பின்பற்றுகின்றனர்.

காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:।
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா॥ 4.12 ॥

செயல்களின் பலனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகின்றார்கள். ஏனெனில் பூமியில் செயல்களின் பலன் விரைவில் உண்டாகிறது.

சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஷ:।
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்॥ 4.13 ॥

மனிதர்கள் குணம் மற்றும் செயல்களின் வேறுபாட்டிற்கு ஏற்ப அவர்களை நான்கு பிரிவாக நான் வகுத்தேன். இவ்வாறு செய்தவன் நான் எனினும், என்னை அப்படி செய்யதவனாகவும் மாற்றங்கள் இல்லாதவனாகவும் அறிந்துகொள்.

ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா।
இதி மாம் யோ அபிஜாநாதி கர்மபிர்ந ஸ பத்யதே॥ 4.14 ॥

செயல்கள் என் மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை. வினைபயனிலும் எனக்கு ஆசையில்லை. இப்படி என்னை யார் அறிகிறானோ அவன் செயல்களினால் கட்டபடுவதில்லை.

ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி:।
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம்॥ 4.15 ॥

இவ்வாறு அறிந்து தான் முன்னைய முமூட்ச்சுகளும் செயல் புரிந்தனர். முன்னோர்கள் முன்னாளில் செய்தது போலவே நீயும் செய்.

கிம் கர்ம கிமகர்மேதி கவயோ அப்யத்ர மோஹிதா:।
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஷுபாத்॥ 4.16 ॥

செய்ய வேண்டியது எது, செய்ய கூடாதது எது என்ற விஷயத்தில் அறிவாளிகள் கூட குழம்பிவிடுகிறார்கள். எதை அறிந்தால் தீமையிலிருந்து விடுபடுவாயோ அந்த செயலை உனக்கு சொல்கிறேன் .

கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:।
அகர்மணஷ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:॥ 4.17 ॥

செய்ய வேண்டியதையும் தெரிந்துகொள்ள வேண்டும், செய்ய கூடாததையும் தெரிந்துகொள்ள வேண்டும். செயல் புரியாமல் இருப்பது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். செயல்களின் போக்கு ஆழமானது.

கர்மண்யகர்ம ய: பஷ்யேதகர்மணி ச கர்ம ய:।
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்॥ 4.18 ॥

செயலில் செயலின்மையையும் , செயலின்மையில் செயலையும் யார் காண்கிறானோ அவன் மனிதர்களுள் அறிவாளி, யோகி எல்லா செயல்களையும் செய்தவன்.

யஸ்ய ஸர்வே ஸமாரம்பா: காமஸங்கல்பவர்ஜிதா:।
ஜ்ஞாநாக்நிதக்தகர்மாணம் தமாஹு: பண்டிதம் புதா:॥ 4.19 ॥

யாருடைய செயல்கள் ஆசையும் சங்கல்பமும் அற்றதாகவும் ஞான தீயால் எரிக்கப்பட்டதாகவும் இருக்குமோ அவனை விவேகி என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

த்யக்த்வா கர்மபலாஸங்கம் நித்யத்ருப்தோ நிராஷ்ரய:।
கர்மண்யபிப்ரவ்ருத்தோ அபி நைவ கிம்சித்கரோதி ஸ:॥ 4.20 ॥

செயலின் பயனில் பற்றைவிட்டு நிலைத்த திருப்தி உடையவனாய், எதையும் சாராதவனாய் இருக்கின்ற ஒருவன் செயலில் ஈடுபட்டாலும், அவன் எதையும் செய்தவன் ஆக மாட்டான்.

நிராஷீர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்ரஹ:।
ஷாரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 4.21 ॥

ஆசையற்ற, மனத்தையும் உடம்பையும் கட்டுபடுத்திய உடைமைகள் அனைத்தும் விட்ட ஒருவன் உடம்பால் மட்டும் செயல்கள் செய்தால் பாவத்தை அடைவதில்லை.

யத்ருச்சாலாபஸம்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸர:।
ஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே॥ 4.22 ॥

எதேச்சையாக கிடைத்ததில் மகிழ்பவன், இருமைகளை கடந்தவன், பொறாமை இல்லாதவன், வெற்றி தோல்விகளில் சமமாக இருப்பவன்-இத்தகையவன் செயலில் ஈடுபட்டாலும் அதனால் கட்டபடுவதில்லை.

கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்திதசேதஸ:।
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே॥ 4.23 ॥

பற்றில்லாத, சுதந்திரமான, ஆண்மவுணர்வில் நிலைபெற்ற மனத்தை உடைய, செயல்களை வேள்வியாக செய்கின்ற ஒருவனின் எல்லா செயல்களும் கரைந்து விடுகிறது.

ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவி: ப்ரஹ்மாக்நௌ ப்ரஹ்மணா ஹுதம்।
ப்ரஹ்மைவ தேந கந்தவ்யம் ப்ரஹ்ம கர்ம ஸமாதிநா॥ 4.24 ॥

அர்ப்பணம் செய்வதற்கான கரண்டி பிரம்மம் . அர்ப்பணம் செய்யபடுகின்ற பொருள் பிரம்மம். பிரம்மமாகிய அக்னியில் பிரம்மத்தால் கொடுக்கபடுகிறது. பிரம்மகர்ம சமாதி நிலையில் உள்ள அவனால் பிரம்மமே அடையபடுகிறது.

தைவமேவாபரே யஜ்ஞம் யோகிந: பர்யுபாஸதே।
ப்ரஹ்மாக்நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி॥ 4.25 ॥

சில யோகிகள் தெய்வ வழிபாட்டையே வேள்வியாக செய்கிறார்கள். வேறு சிலர் வாழ்க்கையின் மூலம் வாழ்க்கையையே இறைவனாகிய அக்னியில் ஆஹிதியாக அளிக்கிறார்கள் .

ஷ்ரோத்ராதீநீந்த்ரியாண்யந்யே ஸம்யமாக்நிஷு ஜுஹ்வதி।
ஷப்தாதீந்விஷயாநந்ய இந்த்ரியாக்நிஷு ஜுஹ்வதி॥ 4.26 ॥

சிலர் செவி முதலிய புலன்களை கட்டுபடுத்துதல் என்ற அக்னியில் சமர்ப்பிக்கிறார்கள். சிலர் கேட்டல் முதலிய விஷயங்களை புலன்கள் என்ற அக்னியில் சமர்ப்பிக்கிறார்கள்.

ஸர்வாணீந்த்ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே।
ஆத்மஸம்யமயோகாக்நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீபிதே॥ 4.27 ॥

சிலர் உணர்வொளி வீசுகின்ற ஆன்மாவில் மனத்தை நிலைநிருத்துவதாகிய யோகம் என்ற அக்னியில் எல்லா புலன்களின் செயல்பாடுகளையும் பிராணனின் செயல்பாடுகளையும் சமர்ப்பிக்கிறார்கள்.

த்ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோகயஜ்ஞாஸ்ததாபரே।
ஸ்வாத்யாயஜ்ஞாநயஜ்ஞாஷ்ச யதய: ஸம்ஷிதவ்ரதா:॥ 4.28 ॥

அப்படியே சுயகட்டுப்பாடு உடைய, உறுதியான சங்கல்பத்தை உடைய சிலர் தானத்தை வேள்வியாக செய்கிறார்கள். சிலர் தவத்தை வேள்வியாக செய்கிறார்கள். சிலர் யோகத்தை வேள்வியாக செய்கிறார்கள். சிலர் கற்பதையும் அறிவை பெறுவதையும் வேள்வியாக செய்கிறார்கள்.

அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணே அபாநம் ததாபரே।
ப்ராணாபாநகதீ ருத்த்வா ப்ராணாயாமபராயணா:॥ 4.29 ॥

உணவு கட்டுப்பாடு உடைய சிலர் அபானானில் பிராணனையும், பிரானனில் அபானனையும் சமர்ப்பிக்கிறார்கள். சிலர் பிராணன் மற்றும் அபாணனின் போக்கை தடுத்து பிராணாயாமம் செய்வதில் ஈடுபடுகிறார்கள்.சிலர் பிராணனின் செயல்பாடுகளை பிரானனில் சமர்ப்பிக்கிறார்கள்.

அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி।
ஸர்வே அப்யேதே யஜ்ஞவிதோ யஜ்ஞக்ஷபிதகல்மஷா:॥ 4.30 ॥

வேள்வியை அறிந்த அனைவரும் வேள்வியால் குறைகள் நீங்க பெறுகிறார்கள்.

யஜ்ஞஷிஷ்டாம்ருதபுஜோ யாந்தி ப்ரஹ்ம ஸநாதநம்।
நாயம் லோகோ அஸ்த்யயஜ்ஞஸ்ய குதோ அந்ய: குருஸத்தம॥ 4.31 ॥

குரு வம்சத்தில் சிறந்தவனே ! வேள்வியின் வாயிலாக கிடைக்கின்ற அமுதத்தை உண்பவர்கள் நித்திய பொருளான இறைவனை அடைகிறார்கள். வேள்வியில் ஈடுபடாதவனுக்கு இந்த உலகமே கிடையாது.மற்ற உலகம் எங்கே

ஏவம் பஹுவிதா யஜ்ஞா விததா ப்ரஹ்மணோ முகே।
கர்மஜாந்வித்தி தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே॥ 4.32 ॥

இவ்வாறு பலவிதமான வேள்விகள் வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் செயல்களை ஆதாரமாகக்கொண்டவை என்று அறிந்துகொள். இவ்வாறு அறிந்து கர்மதளையிலிருந்து விடுபடுவாய்.

ஷ்ரேயாந்த்ரவ்யமயாத்யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரம்தப।
ஸர்வம் கர்மாகிலம் பார்த ஜ்ஞாநே பரிஸமாப்யதே॥ 4.33 ॥

எதிரிகளை வாட்டுபவனே புறப்பொருட்களால் செய்யபடுகின்ற யாகத்தைவிட ஞான வேள்வி சிறப்பானது. அர்ஜுனா எல்லா செயல்களும் ஞானத்தில் நிறைவடைகிறது.

தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஷ்நேந ஸேவயா।
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வதர்ஷிந:॥ 4.34 ॥

வணங்கியும் கேள்விகள் கேட்டும், பணிவிடை செய்தும் அந்த ஞானத்தை பெறவேண்டும். உண்மையை அறிந்த மகான்கள் உனக்கு அந்த ஞானத்தை தருவார்கள்.

யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ।
யேந பூதாந்யஷேஷாணி த்ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ மயி॥ 4.35 ॥

அர்ஜுனா ! அந்த ஞானத்தை பெற்றால் மீண்டும் இப்படி குழப்பம் அடைய மாட்டாய். அந்த ஞானத்தின் பயனால் எல்லா உயிர்களை உன்னிலும் அப்படியே என்னிலும் காண்பாய்.

அபி சேதஸி பாபேப்ய: ஸர்வேப்ய: பாபக்ருத்தம:।
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸம்தரிஷ்யஸி॥ 4.36 ॥

பெரிய பாவம் செய்தவனாக இருந்தாலும், எல்லா பாவங்களையும் ஞானமாகிய தெப்பத்தால் கடப்பாய்.

யதைதாம்ஸி ஸமித்தோ அக்நிர்பஸ்மஸாத்குருதே அர்ஜுன।
ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே ததா॥ 4.37 ॥

அர்ஜுனா ! கொழுந்து விட்டு எரியும் நெருப்பு விறகுகளை எப்படி சாம்பலாக்குகிறதோ அப்படி ஞானமாகிய நெருப்பு எல்லா வினைபயன்களையும் சாம்பலாக்குகிறது.

ந ஹி ஜ்ஞாநேந ஸத்ருஷம் பவித்ரமிஹ வித்யதே।
தத்ஸ்வயம் யோகஸம்ஸித்த: காலேநாத்மநி விந்ததி॥ 4.38 ॥

புனிதபடுத்துபவற்றுள் ஞானத்திற்கு இணையாக எதுவும் இல்லை. யோகி அந்த ஞானத்தை கால கிரமத்தில் தன்னுள் அடைகிறான்.

ஷ்ரத்தாவாம்ல்லபதே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்ரிய:।
ஜ்ஞாநம் லப்த்வா பராம் ஷாந்திமசிரேணாதிகச்சதி॥ 4.39 ॥

சிரத்தை உடைய, ஞானத்திலேயே கண்ணும் கருத்துமான, புலன்களை வசப்படுத்திய ஒருவன் ஞானம் பெறுகிறான். அதன் காரணமாக வெகுவிரைவில் மேலான அமைதியை பெறுகிறான்.

அஜ்ஞஷ்சாஷ்ரத்ததாநஷ்ச ஸம்ஷயாத்மா விநஷ்யதி।
நாயம் லோகோ அஸ்தி ந பரோ ந ஸுகம் ஸம்ஷயாத்மந:॥ 4.40 ॥

அறிவற்ற, சிரத்தையில்லாத சந்தேகவாதி அழிகிறான். சந்தேகவாதிக்கு இந்த உலகமும் இல்லை. அந்த உலகமும் இல்லை, சுகமும் இல்லை.

யோகஸம்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸம்சிந்நஸம்ஷயம்।
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்நந்தி தநம்ஜய॥ 4.41 ॥

அர்ஜுனா ! யோகத்தினால் செயல்களை விட்டு ஞானத்தினால் சந்தேகம் நீங்கபெற்று, ஆன்மாவில் நிலைபெற்று நிலத்திருப்பவனை செயல்கள் கட்டுவதில்லை.

தஸ்மாதஜ்ஞாநஸம்பூதம் ஹ்ருத்ஸ்தம் ஜ்ஞாநாஸிநாத்மந:।
சித்த்வைநம் ஸம்ஷயம் யோகமாதிஷ்டோத்திஷ்ட பாரத॥ 4.42 ॥

இதயத்தில் இருக்கின்ற ஆன்மாவை பற்றிய, அறியாமையிலிருந்து தோன்றிய இந்த சந்தேகத்தை ஞான வாளினால் வெட்டி யோகத்தை பயிற்சி செய். பரத குலத்தில் உதித்தவனே ! அதற்காக எழுந்திரு.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஜ்ஞாநகர்மஸம்ந்யாஸயோகோ நாம சதுர்தோ அத்யாய:॥ 4 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஞான கர்ம சன்யாச யோகம்' எனப் பெயர் படைத்த நான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.

விளக்கம்:

கீதையின் உண்மை என்ன உயிரினங்கள் மறுபிறவி உடையவை. இறைவனை அடையும் வரை மறுபிறவி நீடிக்கும். பிறவி இருந்தால் இறப்பு நிச்சயம். இறைவனை எப்போது அடைவோம் உண்மையை நன்றாக புரிந்துகொண்டு உலக நலனுக்காக தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை செய்து கொண்டு ஆனால் செயலின் விளைவின் மீது ஆசை பற்று வைக்காமல் இருப்பவன் இறைநிலைக்கு தகுதியானவன்.

அனைத்து கடமைகளையும் செய்து கொண்டு அதன் பலனை முற்றிலும் இறைவனுக்கே அர்பணித்து விட்டு இருக்கவேண்டும். இவ்வாறு இருப்பவன் இந்த உலகத்தின் எந்த பாவத்தையும் அடைய மாட்டான். இந்து மதம் என்றால் தவம் செய்ய வேண்டும் தியானம் செய்ய வேண்டும் இது தான் இந்து மதம் என்று பலரும் நினைக்கிறார்கள்.

இது உண்மை இல்லை. உண்மை என்னவென்றால் தவம் தியானம் சிறந்தது தான் ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை திறம்பட செய்து முடித்த ஒருவனுக்கு, வேலைகள் இனி இல்லை என்ற நிலையில் இருக்கின்ற ஒருவனுக்கு, தவமும் தியானமும் இறைவனை அடைவதற்கு வழியாக அமைகிறது. நிர்ணயிக்கப்பட்ட கடமைகள் இருக்கும் பட்சத்தில் அந்த கடமைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் கடமையாக நினைத்து திறம்பட செய்ய வேண்டும்.

கடமைகளை திறம்பட செய்வதன் மூலமே கர்மயோகி இறைவனை அடைய முடியும். கடமைகளை விட்டுவிட்டு தியானம் செய்தால் அது மூடனின் செயல். அது ஒருவனை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லாது. தியானம் மூலம் அதாவது ஞான மார்க்கத்தின் மூலம் இறைவனை அடைபவன் அடையும் நிலையை வேலைகளை செய்பவனும் அடையலாம்.

ஆனால் கடமைகளை வேலைகளை செய்யும் போது அதனால் விளையும் பலனில் பற்று வைக்காமல் செய்தால் அவனும் ஞான யோகி போலவே கருதபடுவான். ஏனெனில் இவனுக்கு எந்த வித ஆசையோ, வெறுப்போ, விருப்போ, இல்லை. அனைத்தையும் சமமாக கருதுகிறான்.