இலங்கைக்கு வந்த எகிப்து நாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு!
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெணிக்கே புகையிரதத்தில் இருந்து தவறி வீழ்ந்து எகிப்து நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த புகையிரதத்தில் பயணித்த சுற்றுலாப் பயணி பட்டிப்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (16) பிற்பகல் தவறி கீழே வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
மரணித்தவர் மொஹமட் அப்துல் ஹமிட் (32) என்ற எகிப்து நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் இலங்கை வந்த அவர், எல்ல நோக்கி தொடருந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது பட்டிப்பொல தொடருந்து நிலையத்துக்கு அருகில் மிதிபலகையிலிருந்து தவறி வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.