ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் முல்லைத்தீவுக்கு விஜயம்!
பூர்வாங்க ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்வதற்கும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கும் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களின் உறவினர்களை ஏப்ரல் முதல் வாரத்தில் சந்திக்க ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அவர்களிடம் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளும்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம். நவாஸ், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, முன்னாள் மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் முன்னாள் மேயர் யோகேஸ்வரன் சத்குணராஜா ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 100 பேரிடம் விசாரணை நடத்தினர்.