அன்று ஆயுதத்தால் கொன்றழித்தாய்; இன்று பட்டினியால் அழிக்கின்றாய்! பொருட்கள் விலையேற்றத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் முன்னணி போராட்டம்

#SriLanka #government #Food #Weapons
Prasu
2 years ago
அன்று ஆயுதத்தால் கொன்றழித்தாய்; இன்று பட்டினியால் அழிக்கின்றாய்! பொருட்கள் விலையேற்றத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் முன்னணி போராட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் இன்று கவனியீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரையான ஒரு மணித்தியாலம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, எம் தேசத்தை அங்கீகரித்தால் உன் தேசமும் வளம் பெறும், அன்று ஆயுதத்தால் கொன்றழித்தாய்; இன்று பட்டினியால் அழிக்கின்றாய், சுயாட்சி இருந்தால் மட்டுமே தமிழரின் பொருளாதாரத்தை நாம் மேம்படுத்த முடியும், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழர் தேசத்தை அங்கீகரி, ஆசியாவின் அதிசயமே பெற்றோல் இல்லை; டீசல் இல்லை; பால்மா இல்லை, இனவாதம், மதவாதத்தால் பொருளாதாரத்தை அழிக்காதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.