இந்திய வெளிவிவகார அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு

Mayoorikka
2 years ago
இந்திய வெளிவிவகார அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (28) நடைபெற்றது.

பருத்தித்துறை உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் இதன்போது விரிவாக ஆராய்ந்தனர்.

இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கச்சதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு தொடர்பாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலும் பயனுள்ளதாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான பேச்சுவார்த்தைகளை வினைத்திறனாக தொடர்ந்தும் மேற்கொள்வதன் ஊடாக, குறித்த விவகாரத்திற்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வினை அடைய முடியுமென இரண்டு நாடுகளின் அமைச்சர்களும் நம்பிக்கை வெளியிட்டனர்.

வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் சில வேண்டுகோள்களை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தி தொடர்பான சுமார் 23 கோரிக்கைளையும் முன்வைத்துள்ளார்.

காங்கேசன் துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து, வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு கடன் திட்டத்தின் அடிப்படையில் 100 மில்லியன் பெறுமதியான மூலப் பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், காங்கேசன் துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பாண்டிச்சேரி இடையிலான பயணிகள் படகு சேவை, பலாலி – திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்து சேவை, காரைநகரில் அமைந்துள்ள சீநோர் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்துவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ளுதல் போன்ற பல கோரிக்கைகள் இதன்போது இந்திய வெளியுறவு அமைச்சரிடம் இலங்கை கடற்றொழில் அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.