இலங்கையில் இந்திய இராணுவமா? பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

Mayoorikka
2 years ago
இலங்கையில் இந்திய இராணுவமா? பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை எனவும் இது தொடர்பில் சில இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இலங்கையில் இந்திய இராணுவ விமானம் தரையிறங்கியதாக வதந்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த எவரும் நாட்டுக்குள் நுழைய வில்லை இவ்வாறு பொய்யாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் சித்தரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற 'மித்ர சக்தி' என்று அழைக்கப்படும் இந்திய-இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காகவே இந்த இந்திய இராணுவக் குழு இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தை அப்போது வந்தடைந்ததாக பாதுகாப்புச் செயலாளர் மேலும் விளக்கமளித்தார்.

அதேசமயம் மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்குடன் நோக்கங்களுடன் வெளியிடப்படும் இதுபோன்ற தவறான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் வீணாக பீதியடைய வேண்டாம் என்றும் ஊடக நெறிமுறைகளைப் பேணி சகல ஊடகங்கள் ஊடாக வெளியிடப்படும் அறிக்கைகள் தொடர்பில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு சூழ்நிலையையும் கையாளும் திறன் இலங்கை பாதுகாப்புப் ப்படைகளுக்கு உள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.