தமிழகத்துக்குத் தப்பிச் செல்வோரைத் தடுக்க மன்னாரில் கடற்படையினர் தீவிர நடவடிக்கை

#Mannar #Tamil Nadu
Prasu
2 years ago
தமிழகத்துக்குத் தப்பிச் செல்வோரைத் தடுக்க மன்னாரில் கடற்படையினர் தீவிர நடவடிக்கை

இலங்கையில் இருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வோரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மன்னாரில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை மற்றும் வருமானம் இன்மை காரணமாகப் பலரும் தமிழகத்துக்குத் தப்பியோடி வருகின்றனர். இதன்காரணமாக இராஜதந்திர ரீதியில் அழுத்தங்கள் அதிகமாகக் காணப்படும் என்பதால் தமிழகத்துக்குத் தப்பியோடுவோரைத் தடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதிக்குப் பின்பு இலங்கையில் இருந்து 39 பேர் தமிழகத்துக்கு அகதிகளாகத் தப்பிச் சென்றுள்ளதால் அதனைத் தடுக்க கடற்படையினர் மற்றும் இரணுவத்தினர் மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்காகக் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கடற்படையினரின் அதிகாரிகள் கூட்டம் நடத்திய அதேநேரம் இராணுவ அதிகாரிகளும் சந்திப்பை மேற்கொண்டனர்.