அத்தியாவசியப் பொருட்கள் நாட்டில் முற்றாக இழக்கப்படும் அபாயம்! மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை! நிதி அமைச்சர் எச்சரிக்கை

Mayoorikka
2 years ago
 அத்தியாவசியப் பொருட்கள் நாட்டில் முற்றாக இழக்கப்படும் அபாயம்! மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை! நிதி அமைச்சர் எச்சரிக்கை

நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என நிதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தற்போது பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப்பொருட்கள் எதிர்காலத்தில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
இன்று காலை  ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே நிதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நாடாளுமன்றத்திலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது பற்றாக்குறையாக காணப்படும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டிற்கு முற்றாக இழக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது இலங்கை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதும் ஆழமானதுமானதென்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தற்போது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் செய்த வரலாற்றுத் தவறுகளே காரணம் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வரி குறைப்பு, பொருத்தமான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நடாதமை மற்றும் கடன் மறுசீரமைப்பில் தாமதம் என்பனவே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.

எனேவ தற்போதைய நெருக்கடியை இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 ஆண்டுகள் வரை இழுத்தடிப்பதா என்பதை அரசியல்வாதிகளே முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டின் செலவினமானது வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் மொத்த வருவாய் 1464 பில்லியன் என்றும் செலவு 3522 பில்லியன் ரூபாய் எனவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் தற்போது பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.