கிழக்கில் ஊரடங்கை மீறி வாகனங்களில் பயணித்தோருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை முன்னெடுப்பு!

#SriLanka #Lanka4
Shana
2 years ago
கிழக்கில் ஊரடங்கை மீறி வாகனங்களில் பயணித்தோருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை முன்னெடுப்பு!

மட்டக்களப்பு நகரில் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள போது அதனை தேவையின்றி வீதியில் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பிரயாணிப்பவர்களை பொலிஸார் நிறுத்தி சோதனையிட்டு கண்டுபிடித்து திருப்பி அனுப்பும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

நாடு பூராக ஊரடங்கு நடைமுறையிலுள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சில அசம்பாவிதங்களையடுத்து நேற்று இரவு இராணுவத்தினர் பல முக்கிய சந்திகளில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நகர் பகுதிகளில் உள்ள வீதிகளில் சோதனை நடவடிக்கையினை இன்று முன்னெடுத்தனர்.

இதன் போது வீதிகளில் பிரயாணித்த வாகனங்களை பொலிஸார் நிறுத்தி சோனையிட்டு ஊரடங்கு சட்டத்தை மீறி தேவையின்றி பிரயாணித்தவர்களை கண்டுபிடித்ததையடுத்து அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

நேற்று மாலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாக பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறப்போவதாகவும் பொதுமக்கள் இராஜாங்க அமைச்சரின் இல்லத்தினையும் முற்றுகையிட போவதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலியைடுத்தே இந்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன், அப்பகுதியில் குழுமி நின்றவர்களும் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர்.

இதேநேரம் மட்டக்களப்பு நகரின் புறநகர்ப்பகுதியில் மக்கள் வழமையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதைக் காணமுடிந்தது.