இராணுவ வாகனமும் பால் ஏற்றிச்சென்ற வாகனமும் மோதி விபத்து
நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இராணுவ வாகனம் ஒன்றும் பால் கொள்வனவு செய்து கொண்டு சென்ற வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதோடு கொள்வனவு செய்துகொண்டு சென்ற ஆயிரக்கணக்கான லீட்டர் பாலும் வீதியில் சிதறி வீணாகியுள்ளது.
நெடுகேணி பகுதியிலிருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இராணுவ வாகனம் ஒட்டுசுட்டான் சம்மளம்குளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்குள் திடீரென சமிக்கைகள் எதுவும் காட்டாது திருப்ப முற்பட்ட நிலையில் பின்னால் வந்துகொண்டிருந்த பால் கொள்வனவு வாகனம் இராணுவ வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது
இதனால் கொள்வனவு செய்து கொண்டு சென்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான லீற்றர் பால் வீதியில் சிதறி வீணாகியுள்ளதோடு பால் ஏற்றிய வாகன சாரதி காயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்த இராணுவ பிரசன்னம் தொடர்சியாக காணப்படுவதால் அடிக்கடி இவ்வாறு இராணுவ வாகனங்களோடு மோதுண்டு விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.