46 விவசாய வலயங்களில் பொருத்தமான மேலதிக பயிர்களை பயிரிடத் திட்டம்
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கு விவசாயிகள் எதிர்நோக்கும் பல முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென அகில இலங்கை விவசாய சம்மேளனம் தெரிவித்துள்ளது.
விதைகள், விவசாய இரசாயனங்கள் மற்றும் உரங்களின் பிரச்சினைகள் மற்றும் எரிபொருள் பிரச்சினை என அனைவரும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
நாட்டின் 46 விவசாய வலயங்களில் பொருத்தமான மேலதிக பயிர்களை பயிரிடுவதற்கான முறையான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்தார்.
மேலதிக பயிர்களை பயிரிடுவதில் விதைகளில் பிரச்சினை இல்லை எனவும் விவசாய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வரவிருக்கும் உணவு நெருக்கடி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
உணவு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஒவ்வொரு அமைச்சு மட்டத்திலும் நடைமுறைப்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்வைக்க முன்மொழியப்பட்டுள்ளது.