அதிகரித்து வரும் மழை! வெள்ள அபாயத்தில் தாழ் நிலங்கள்
நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த சில தினங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் பிரதி முன்னறிவிப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் மீட்புக் குழுவினர் மற்றும் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ள அபாயம் காரணமாக நெலுவ மற்றும் தவலம பிரதேச செயலகப் பகுதிகளில் இராணுவம் மற்றும் கடற்படையின் இரண்டு மீட்புக் குழுக்களும் இரண்டு படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மழை தொடரும் பட்சத்தில் களு, களனி, ஜின், நில்வள மற்றும் அத்தனகல்லு ஓயா ஆகிய ஆறுகளை ஒட்டியுள்ள தாழ்நிலப் பகுதிகள் ஆபத்தை எதிர்கொள்ளக் கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.