சப்புக்கஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் ஸ்தம்பிதம்
சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள கொதிகலன்களிலுள்ள (பொய்லர்) 'டர்போ ஃபேன் ' குழாய்கள் வெடித்தன் காரணமாக எரிபொருள் சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 20 ஆம் திகதியன்று மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 70 நாட்களுக்குப் பின்னர் மீள ஆரம்பிக்கும் முயற்சிகள் நேற்று முன்தினம் (30) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்குள்ள கொதிகலன்களின் ஏற்பட்ட கோளாறு காரணமாக வேலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,
" இரண்டு கொதிகலன்களும் செயற்படுத்தப்பட்ட போதிலும் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பொறுப்பான சில அதிகாரிகளின் அறியாமை காரணமாக அதனை முறையாக இயக்க முடியாமல் போயுள்ளது.
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் நீண்டகாலமாக ஈரானின் லைட் மற்றும் மார்பன் வகை கச்சா எண்ணெய்யே இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வந்தது.
எனினும் தற்போது ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கச்சா எண்ணெயிலிருந்து மிகவும் குறைந்தளவில் மாத்திரமே பெற்றோல் மற்றும் டீசல் பெற முடியும்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 90,000 டொன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கபெறும் 51 சதவீதமான எண்ணெயிலிருந்து 17 சதவீதமானவை மாத்திரமே பெற்றோல் மற்றும் டீசல் ஆகும். ஏனையவை தார் ஆகும்.
எவ்வாறாயினும் அடுத்த கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.