அம்பாறையில் எம்பிக்கள் வீடுகள் தீக்கிரை வழக்கில் 33 பேர் கைது
அம்பாறையில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் மற்றும் நகரசபை முதல்வர் உட்பட அவர்களின் உறவினர்களது வீடுகளை தீயிட்ட மற்றும் சேதமாக்கிய சம்பவம் தொடர்பாக இதுவரையில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறையில் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள்
இதில் பெண்கள் மற்றும் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவர் உட்பட 33 பேரை இதுவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைக் குழுவின் பொறுப்பதிகாரி பி.பிரகலாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தையடுத்து, அம்பாறையிலுள்ள ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வீரசிங்க, விமல திஸாநாயக்கா மற்றும் அவரது மகனின் வீடு, அம்பாறை நகரசபை முதல்வர் ஆகியோரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசேட பொலிஸ் குழுவினை பொலிஸ் அதிகாரி பி.பிரகலாதன் தலமையில் அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, இதுவரை கைது செய்யப்பட்ட 33 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இவர்கள் பிணையில் வெளிவந்துள்ளதுடன் குறித்த சம்பவத்தில் தீக்கிரையாக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக விலை மதிப்பீட்டு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.