«வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்» நூல் வெளியீட்டு விழா (Photos)

Kanimoli
1 year ago
«வேப்ப மரமும் பவளம் ஆச்சியும்»  நூல் வெளியீட்டு விழா (Photos)

ஈழத்தில் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. செல்லையா சதீஸ்குமார் என்னும் இயற்பெயருடை சதீஸ், இலங்கை சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளார். இவர் கவிதைகள், சிறுகதைகள் வாயிலாக தமிழர்களது இன்னலை தனது படைப்பில் வெளிப்படுத்திவரும் படைப்பாளி ஆவார்.


சிறைபட்டிருக்கும் இவ் விடுதலை விரும்பியின் உள்ளக்கிடங்கின் விரிந்த சிறகுகளின் சமூக எண்ணப் படைப்பான சிறுகதைத் தொகுப்பு, திருவள்ளுவர் ஆண்டு 2053 விடைத்திங்கள் 22ம் நாள், அதாவது 05. 06. 2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.15 மணிமுதல் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது. 

மங்கல விளக்கேற்றல்


முதலாவதாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வு தொடங்கப்பெற்றது. 


திருமதி ஆதிலட்சுமி சிவகுமார், திருமதி சேரலாதன் அமலா, திருமதி மதுகரன் தனவதி, திரு. செல்லையா குலம், திரு. பொன்னம்பலம் முருகவேள் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றி வைத்தனர். 

அகவணக்கம்


தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும், சிறிலங்கா மற்றும் இந்தியப்படைகளால் கொல்லப்பட்ட நாட்டுப்பற்றாளர்களையும், பொதுமக்களையும் மற்றும் தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த உலகத்தமிழ் உறவுகளையும் நினைவு கூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

வரவேற்புரை


தமிழர்களறியின் பெயரால் வரவேற்பு உரையினை திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி ஆற்றினார். இன்றைய நாளில் பல் நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அனைத்து நிகழ்வுகளும் ஒர் இனத்தின் நலனிற்கு தேவையானவையே. தனிப்பட்ட கொண்டாட்டங்களும், பொதுப் போட்டி நிகழ்வுகளும், விழாக்களும் எம் தமிழ் மக்களை ஆற்றுப்படுத்தும் ஒரு கருவியாகவே உள்ளது. இவற்றைத்தாண்டி இன்று நூல் வெளியீட்டிற்கு நேரம் ஒதுக்கி வருகை அளித்திருக்கும் அனைவரையும் வரவேற்கின்றோம். நாம் அனைவரும் எமக்காக அனைத்தையும் கொடை அளித்த ஈகையரை மறக்கலாகாது. தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைத்த பொதுமக்களையும் அவர்கள் இன்று தாங்கி நிற்கும் பழுவையும் நாம் குறைக்க முன்வரவேண்டும். இன்று சிறீலங்காவின் சிறையில் தடுப்பில் உள்ள கைதிகளின் சட்டரீதியான விடுதலைக்கு நாம் பங்களிப்பு ஆற்றவேண்டும். இந்நிகழ்வு தடுப்புச் சிறையில் இருக்கும் ஒருவர் எண்ணத்தால் அருகில் வந்து சிறுகதைத் தொகுப்பாக எம்கையில் தந்துள்ளார். இதுபோன்ற படைப்புக்கள் தொடர்ந்தும் வெளிவரத் தமிழர் களறி வழிசெய்யும் என்று உரையில் உரைத்திருந்தார். 

வாழ்த்துரை மற்றும் நல்லாசியுரை


அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்களில் ஒருவரான திருநிறை. விக்னேஸ்வரன் குழந்தை அவர்கள் வாழ்த்தினையும் நல்லாசிகளையும் நல்கினார். 


இந்நூல் படைப்பின் பொருள் சமூகச் சிந்தனை அiனைத்து தமிழ் மக்களையும் சென்றடையவும், உள்ளத்தில் கதைகளின் கருக்கள் எண்ணத்தை தூண்டவும் வாழ்த்தியதுடன், இந்நூல் படைப்பாளியின் தாயார் முதற்பக்கத்தில் குறிப்பிட்டபடி இடர்கள் கடந்து இறைவன் துணையால் சிறையின் இரும்புக்கதவுகள் திறக்கட்டும்! திரு. சதீஸ் போன்று தடுப்பில் உள்ள அனைத்து அரசியற்கைதிகளும் விடுதலைபெற்று நீண்ட வாழ்நாளோடு திருநிறைந்து வாழ நல்லாசிகள் என வாழ்த்தி மொழிந்தார். 

நூலாசிரியர் அறிமுகம் 


வெண்திரையில் சிறு ஒளித்தொகுப்பாக குரல்வடிவில் கருத்துப்படத்துடன் திரு. செல்லையா சதீஸ் (விவேகானந்தனூர் சதீஸ்) நூலாசிரியர் அறிமுகம் திரையிடப்பட்டது. 


சிறீலங்காச் சிறைச்சாலையில் சிறை வாழ்க்கை வாழ்ந்துவரும் அரசியல் கைதி, கவிதைகள், சிறுகதைகள் வாயிலாக தமிழ் மக்களின் இன்னல்களை படைப்புக்களாக்கி வெளியிடுவதில் உள்ள கடினத்தை அரங்கில் இருப்போர் உணரும் வகையில் சதீஸ் அவர்களின் உரைப்பொருள் அமைந்திருந்தது. 

நூலாய்வுச் சிறப்புரை


போராளி திரு. செம்பருதி தன்பட்டறிவினையும், போராளிகள், பொதுமக்கள் சிறையில் முகம் கொடுக்கும் கடினங்களையும் சபையோர்கள் புரியும்படி விளக்கி உரையினைத் தொடங்கினார்.


நான்கரை ஆண்டுகள் சிறைவாழ்வில் தான் வாழ்ந்த சிறைவாழ்வினை சபையோர் கண்முன் கொண்டுவந்து உரையாற்றினார். 


எழுதுவதற்கு வளங்கள் நிறைந்தது அல்ல சிறீலங்காச் சிறை. எழுதியதற்காக உதைவாங்கிய கைதிகளும் உள்ளார்கள். எழுத்தாற்றல் அனைவருக்கும் வாய்க்காது. அப்படி தன் துயரைத்த சொல்லில் எழுத்தில் வெளிக்காட்ட முடியாத கைதிகளின் வலிகளையும் நாம் எண்ணத்தில் கொள்ளவேண்டும் என்றார். 


சிறையின் கதவுகள் இரவு பூட்டப்பட்டு காலையில்தான் திறக்கப்படும். கழிவறை இல்லாது போத்தல்களுக்குள் சிறுநீர் கழிப்பதும், காலையில் கதவு திறந்தவுடன் கழிவறைக்கு செல்வதா, காலை உணவிற்கு செல்வதா எனும் சிக்கலையும் தன் மொழியில் தெளிவுபடுத்தினார்.  


மேலும் தொடர்கையில் தமிழர்களறி என்பது உணர்வுகளை உண்மைகளை அனுபவங்களைப் பகிர்கின்ற எழுத்தாளர்களை முன்நிறுத்தி அவர்களுடைய நூல்களை தமிழர்கள் மத்தியில் பரப்புகின்ற மிகப்பெரும் பணியினை மேற்கொள்கின்றது. இதற்கு முன்னரும் சிறையில் உள்ள எங்களது ஒரு உறவின் படைப்பு இங்குவெளியிடப்பட்டிருந்தது. அதில் பங்கெடுத்த நாம் இன்று இதிலும் பங்கெடுத்திருக்கின்றோம். 


இந்நூலில் வெளிவரும் கதைகளை விளக்கிப் பேசினார். திரு. சதீஸ் இதுவரை வெளியிட்டுள்ள நூல்களையும் நிரல்படுத்திப் பேசினார். 


இலக்கியப் பதிப்புக்கள், கவிதைகள், படைப்புக்கள் தாண்டி தவிப்புடன் எழுத்தினை வெளிகொண்டுவரத் துடிக்கும் இவ்வாறான படைப்பாளிகளுக்கு தமிழர் களறி கைகொடுப்பதற்கு தனது நன்றியினையும் நவின்றார். 

சிறப்புரை


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரால் திருநிறை. கொலம்பஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.


98க் காலப்பகுதியில் தான் வாழ்ந்த சிறைவாழ்வினை மீள்மீட்டிப்பேசிய திரு. கொலம்பஸ், அப்பா எப்போ வருவார் எனும் தலைப்பில் அக்காலத்திலும் தான் எழுதிய எழுத்தினை நினைவூகூர்ந்தார். 


ஒரு எழுத்தாளனாக சிறைக்குள் நுழைந்திருப்பின்கூட எழுதும் மனநிலையினை சிறீலங்காச் சிறை இழக்கச்செய்யும். இவற்றைத் தாண்டி எழுத வாய்ப்பது இலகுவானதல்ல, அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளிருந்து இப்படைப்பினை எழுதிய திரு. சதீஸ் அவர்கள் திறனை வாழ்த்தி உரையினை நிறைத்தார்.